பெண் இனத்துக்கு பெருமை சேர்த்த தங்கத் தலைவி
 

அரசியல் வானில் எண்ணற்ற  அற்புதங்களை நிகழ்த்திக் காட்டிய, இருபத்தி நான்கு மணி  நேரமும் தமிழக மக்களின் முன்னேற்றம் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த, ஒரு ஆட்சியாளருக்கு எப்படிப்பட்ட ஒரு ஆளுமை இருக்க வேண்டும் என்று இந்த உலகத்துக்கு எடுத்துச் சொன்ன ஒரு தன்னிகரில்லாத அரசியல் தலைவிதான் தமிழக மக்கள் அம்மா என்று உள்ளன்போடு போற்றிய  ஜெயலலிதா.



ஒரு நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் அரசியலில் காலடி எடுத்து வைத்து, தனது அயராத உழைப்பால் ஆறுமுறை தமிழக முதல்வராக முடி சூட்டிக் கொண்ட ஒப்பற்ற தலைவியான  ஜெயலலிதாவை  அவர் நடிகை யாக இருந்த காலத்திலிருந்து நான் நன்கு அறிவேன்.அப்போது நான் பத்திரிகை யாளனாக இருந்தேன். அதுதவிர “திரைக்கதிர்” என்ற பெயரிலே சொந்தமாக பத்திரிகை ஒன்றும் நடத்திக் கொண்டிருந்தேன்.இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஜெயலலிதா  நடித்த வெற்றிப்படங்களான “சூர்யகாந்தி. அன்பைத்தேடி, அவன்தான் மனிதன்,பாக்தாத்  பேரழகி,” உட்பட  பல திரைப்படங்களுக்கு நான்தான் பத்திரிகைத் தொடர்பாளர்.

தமிழ்த் திரையுலகில் மிகுந்த செல்வாக்கு மிக்க நடிகையாக அவர் இருந்த அந்த காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் சிலவற்றை இந்தக் கட்டுரையில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் 



மற்ற நடிகைகளைப் போல படப்பிடிப்புக்கு நடுவே அவர் அரட்டையடித்து பேசி நான் பார்த்ததே இல்லை.தனது காட்சியில் நடித்து முடித்துவிட்டு வந்து அமர்ந் தால் என்றால் அடுத்த  நிமிடமே ஆங்கிலப் புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு  படிக்க ஆரம்பித்துவிடுவார்.

அவரைப் பேட்டி காண வருகின்ற பத்திரிகையாளர் மிகப் பெரிய  பத்திரிகையைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி சிறிய பத்திரிகையாளராக இருந்தாலும் சரி அவரது உபசரிப்பு மாறவே மாறாது. பத்திரிகையாளர்களை ஒரு ராஜா மாதிரி நடத்துவார். அவரைப் பேட்டி காண வருவதாக நீங்கள் சொன்ன நேரத்துக்கு பத்து நிமிடத் துக்கு முன்னாலேயே  உங்களுக்காக ஒரு நாற்காலி அவர் அருகே போடப்பட்டி ருக்கும். அதே மாதிரி நீங்கள்  அவர் அருகில் அமர்ந்து பேசத் தொடங்கிய பத்தா வது நிமிடம் காபியோ, குளிர் பானமோ உங்களைத் தேடி வரும்.

பத்திரிகையாளர்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவராக விளங்கிய அவர் 1973 ஆம் ஆண்டு  தன்னுடைய   பிறந்த நாள் விழாவை சவேரா ஓட்டலில் கொண்டா டிய போது அந்த பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட சுதேசமித்திரன் ராம மூர்த்தி,திரையுலகம் துரைராஜ்,மதி ஒளி சண்முகம்,பிலிமாலயா வல்லபன் ,தினத் தந்தி அதிவீர பாண்டியன் மற்றும் நான் உட்பட பல பத்திரிகையாளர்களுக்கு ஆளுயர மாலை அணிவித்தது மட்டுமின்றி அழகான ஒரு பார்க்கர் பேனாவையும் அவர்  பரிசளித்தார்.அந்த நிகழ்ச்சிக்கு  பின்னாலே ஒரு முக்கியமான சம்பவம் இருக்கிறது



“கங்கா கவுரி” என்ற பெயரிலே பி ஆர் பந்துலு அவர்கள் தயாரித்து இயக்கிய படத்தில் ஜெயலலிதாதான் நாயகி.ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்த அந்தப்படத்தின் படப்பிடிப்பு மைசூர் பிரீமியர் ஸ்டுடியோவில் நடைபெற்ற போது அந்தப் படத்தைப்பற்றி பத்தரிகைகளில் எழுதுவதற்காக சில பத்திரிகை யாளர்களை அழைத்திருந்தார் பந்துலு. அவரது அழைப்பை ஏற்று நாங்கள் மைசூர் சென்றிருந்தோம்.

பகல் பத்து மணியளவில் கங்கா கவுரி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த பிரிமியர் ஸ்டுடியோவிற்கு சென்ற நாங்கள் படப்பிடிப்பில் ஜெமினி கணேசன்,ஜெயலலிதா இருவரையும் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போது வெறித்தனமாக  கூச்சல் போட்டுக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அந்த படப்பிடிப்பு தளத்தில் ஜெயலலிதாவைச் சூழ்ந்து கொண்டு விட்டார்கள்

ஒரு பத்திரிகைப் பேட்டியில் நான் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்று ஜெயலிதா கொடுத்திருந்த பேட்டியை மாற்றி தான் கன்னடத்தைச் சேந்தவர் என்று சொல் லும்படி வற்புறுத்தி உரக்க கூச்சல் போட்ட  அவர்கள் கையில் கத்தி உட்பட பல ஆயுதங்கள்  இருந்ததைப் பார்த்த பத்திரிகையாளர்களாகிய நாங்கள் அனைவரும் ஜெயலலிதாவுக்கு முன்னாலே ஒரு அரண் போல நின்று கொண்டோம்.

நேரம் ஆக ஆக எந்த அசம்பாவிதம் வேண்டுமானாலும் நடக்ககலாம் என்ற அந்தச்  சூழ்நிலையில் கன்னட பட இயக்குனரான ரவி என்பவரும், ஜெமினி கணேசனும், இன்னும் சிலரும் "பிரச்னை மிகவும் பெரியதாகிவிடும் போலிருக் கிறது.அதனால் போனால் போகிறது ஒரு முறை அவர்கள் சொலவது போல சொல்லி விடுங்களேன்" என்று ஜெயலலிதாவிடம் சொன்னார்கள். "எனக்கு என்ன நடந்தாலும் சரி இவர்களுக்கு பயந்து உண்மைக்கு புறம்பான ஒன்றைச்   சொல்ல மாட்டேன் "என்று  துணிச்சலோடு அவர்களை எதிர்த்து நின்றார் ஜெயலலிதா..



எவ்வளவு போராடினாலும் அவர் அசைந்து கொடுக்க மாட்டார் என்பது தெரிந்த தும் அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்று  விட்டனர்.அதற்குப் பின்னர் அப்படி ஒரு விபரீதமான சூழ்நிலையில் அங்கே தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டாம் என்று எம். ஜி. ஆர் கூறிய அறிவுரையைக் கேட்டு ஜெயலலிதா அன்றிரவே   சென்னை திரும்பினார்.



“கங்கா கவுரி” 

படப்பிடிப்பில் அவருக்கு எந்த ஆபத்தும் நேர்ந்து விடக்கூடாது என்று அவருக்கு முன்னாலே அரண் போல இருந்து காப்பற்றிய பத்திரிகையாளர் களுக்கு நன்றி தெரிவிக்கின்ற விழாவாக தன்னுடைய  25 வது பிறந்த நாள் விழா வினை மாற்றிய அவர்  எங்களுக்கு நன்றி தெரிவித்து ஆளுயர மாலையை அணி வித்தது மட்டுமின்றி பார்க்கர்  பேனா ஒன்றையும் பரிசளித்தார்.


அரசிலில் அவர் அடியெடுத்து வைத்த பிறகு இரும்பு நிகர் பெண்மணி என்று பத்திரிகைகள் அவரைப் பாராட்டும் போதெல்லாம் இந்த சம்பவம் எனக்கு நினைவுக்கு வரும். அநீதிகளை  இரும்பு மனம் கொண்டு எதிர்க்கின்ற அவரது குணம் அரசியலுக்கு வந்ததற்குப் பிறகு அவரிடம் வந்ததல்ல.இயல்பாகவே அவரிடம் குடி கொண்டிருந்த குணம் அது.

அதே போன்று பத்திரிகைகளில் தன்னைப்பற்றி தவறாக ஒரு சிறு செய்தி வந்தா லும் அவர்  தாங்கிக் கொள்ள மாட்டார்.அந்த செய்தியினை  அலட்சியப்படுத் தாமல் உடனே அதற்கு பதில் தருவதையும்  அவர் வழக்கமாக வைத்திருந்தார்.

1980 ஆம் ஆண்டு ஒரு ஆங்கிலப் பத்திரிகை நிருபர் ஜெயலலிதா சினிமா உலகில் தனது இடத்தை மீட்பதற்காக போராடுகிறார் என்ற அர்த்தம் தொனிக்கும்படியாக ஒரு கட்டுரையை எழுதிவிட்டார்

உடனே அந்தப் பத்திரிகையாளருக்கு தன கைப்பட கடிதம் எழுதிய அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தோடு “பில்லா” படத்தி;ல் ஜோடியாக நடிக்கின்ற வாய்ப்பு கூட  முதலில் தன்னைத்தான் தேடி வந்தது என்றும் தனிப்பட்ட சில காரணங்களால் தான் அந்த வாய்ப்பை நிராகரித்த பின்னரே அந்த வாய்ப்பு ஸ்ரீபிரியாவிற்கு கிடைத் தது என்பதையும் குறிப்பிட்டுவிட்டு இதிலிருந்தே பட வாய்ப்பு தேடி அலையும் நிலையில் நான் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம் நறுக்குத் தெறித் தது போல அந்தக் கடிதத்திலே குறிப்பிட்டிருந்தார்

நடிகர் நடிகைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு எதிராக ஏதாவது எழுதினால் தான் எப்போதும் அவர்களிடமிருந்து எதிர்ப்பு வரும். தினமும் காலை  எழுந்த வுடன்  இந்த நடிகை போர்ன் விடாதான் குடிப்பார் என்றோ இந்த நடிகர் தினமும் காலையில் சாமியை கும்பிடாமல் வெளியே கிளம்ப மாட்டார் என்றோ செய்தி வெளியிட்டால் அவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டார்கள் அதை மனதில் வைத்துக்கொண்டு தஞ்சை குஞ்சிதபாதம் என்ற சினிமா பத்திரிகை நிருபர் ஜெய லலிதா செவ்வாய்கிழமை அன்று விரதம் என்றும் செவ்வாய் கிழமைகளில் அவர் மதியம் சாப்பிட மாட்டார் என்றும் ஒரு பத்திரிகையில் துண்டுச் செய்தி ஒன்றினை வெளியிட்டிருந்தார். அந்தச் செய்தி வெளியான அடுத்த வாரம் அந்த நிருபரை சந்தித்தபோது "ஏன் இப்படி எல்லாம் தவறான தகவல்களை எழுதுகிறீர்கள்? நான் செவ்வாய்கிழமைகளில் ஏதாவது ஒரு வெளிப்புறப் படப்பிடிப்பில் வழக் கம்போல உணவு அருந்துவதைப் பார்க்கும் ரசிகர் என்னைப்பற்றி என்ன நினைப் பார்?விரதம் இருப்பதாக சொல்லிவிட்டு சாப்பிடுவதாக தவறாக நினைக்க மாட் டாரா?என்னைப்பற்றி எந்த செய்தி வெளியிடுவதாக இருந்தாலும்  என்னிடம் கேட்காமல் வெளியிடாதீர்கள்” என்று கூறினார்

தன்னைப்பற்றி ஒரு சிறிய செய்தி கூட தவறாக வந்துவிடக்கூடாது என்பதில் அவர் எந்த அளவு எச்சரிக்கையாக இருந்தார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு உதாரணம்.

போயஸ் தோட்டத்தில் தான் புதிதாக கட்டிய வீட்டிற்கு வேதா இல்லம் என்று தனது அன்னையின் பெயரை சூட்டிய அவர்  அந்த வீட்டிற்கு குடி புகுந்த போது எல்லா சினிமா பத்திரிகையாளர்களையும் அழைத்தது மட்டுமின்றி அவர்கள் விருந்து சாப்பிட்டபோது கூடவே இருந்து எல்லோரயும் கனிவாக உபசரித்தார்

எந்த விளம்பரமும் இன்றி பத்திரிகையாளர்கள் பலருக்கு எண்ணற்ற உதவிகளை செய்திருக்கும் அவர் மறந்தும் அதைப்பற்றி எப்போதும் வெளியிலே தெரிவித் ததே இல்லை.

நடிகை என்ற அந்தஸ்திலிருந்து அரசியலில் அடியெடுத்து வைத்து தமிழ் நாட்டின் தனிப் பெரும் சக்தியாக உருவாகி கோடானகோடி மக்கள் அம்மா என்று அழைக் கின்ற நிலைக்கு வந்த பின்பும் இந்த  தனிப்பட்ட குணங்கள் தன்னிடமிருந்து விலகாமல் பார்த்துக் கொண்ட தங்க மகளாக அவர் இருந்தார்.

எந்த சந்தர்ப்பத்தில் இரும்பாக இருக்க வேண்டும் எந்த சந்தர்ப்பத்தில் கரும்பாக இருக்க வேண்டும் என்பதை பூரணமாக உணர்ந்திருந்தது மட்டுமின்றி அப்படியே தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்ட ஈடு இணையற்ற தலைவியாக அவர் விளங்கியதால்தான்  அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி வெளியானபோது  கோடிக்கனக்க்கானவர்கள் கண்ணீர் வடித்தனர் .

இந்திய அரசியல் இன்னும் பல பெண் முதலமைச்சர்களை சந்திக்கலாம். ஆனால் ஆட்சித் திறனில்  ஜெயலலிதாவிற்கு நிகரான ஒரு தலைவியை மீண்டும் சந்திக்குமா என்பது பதில் இல்லாத ஒரு கேள்விதான்.

 

  

Comments

Popular posts from this blog

சிவாஜின் நடிப்பை குறை சொன்ன இயக்குனர்