சிவாஜின் நடிப்பை குறை சொன்ன இயக்குனர்

 


சிவாஜின் நடிப்பை குறை சொன்ன இயக்குனர்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பிலே எப்படிப்பட்ட இமயம் என்பதை நீங்கள் அனைவருமே அறிவீர்கள்.



 நடிப்பை பொறுத்தவரை அவர் ஒரு பல்கலைசாலை. அப்படிப்பட்ட சிவாஜி அவர்களின்  நடிப்பு சரியில்லை  என்று அவர் பார்த்து வளர்ந்த ஒரு இயக்குனர் சொன்னால் எப்படி இருக்கும்?

அப்படிப்பட்ட ஒரு சம்பவம் சிவாஜி வாழ்க்கையில் நடைபெற்றது.அந்த இயக்குனரின் பெயர் கே எஸ் கோபாலகிருஷ்ணன்





சிவாஜி கணேசன் பத்மினி இருவரும் ஜோடியாக நடிக்க பேசும் தெய்வம் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தார் கே எஸ் கோபாலகிருஷ்ணன்



 அந்தப்படத்தின் பெரும்பகுதி முடிவடைந்து விட்டது அன்றுதான் கடைசீ நாள் படப்பிடிப்பு.

சிவாஜி நடித்துக் கொண்டிருந்த காட்சி ஒன்றைப் படமாக்கிக் கொண்டிருந்த கே எஸ் கோபாலகிருஷ்ணன்  சிவாஜி  நடித்து முடித்தவுடன் ஒன் மோர் என்றார்

சிவாஜி திரும்பவும் நடித்தார்

அவர் நடித்து முடித்தவுடன் மீண்டும் ஒன் மோர் என்றார் கே.எஸ்.ஜி.

சிறு முக சுளிப்பு கூட இல்லாமல் மீண்டும் நடித்தார் சிவாஜி

அதிலும் திருப்தி ஏற்படாமல் மீண்டும் “ஒன் மோர்”என்றார் கே எஸ் ஜி

இப்படி ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல ஆறு முறை சொன்னார் அவர்.  

சிவாஜியைப் பொறுத்தவரையில் எந்தக் காட்சியானாலும் இயக்குனர் சொல்வதை அப்படியே உள் வாங்கிக் கொண்டு முதல் டேக்கிலேயே அற்புதமாக நடிக்கக் கூடிய ஆற்றல் பெற்றவர். இது தமிழ் சினிமா உலகம் முழுவதும அறிந்த ஒரு விஷயம். அப்படிப்பட்ட சிவாஜி நடித்ததில் திருப்தி ஏற்படாமல் ஆறாவது முறையாக  கே. எஸ். ஜி. “ஒன் மோர்” கேட்டபோது அடுத்து விபரீதமாக ஏதோ நடக்கபோகிறது என்று மொத்த செட்டும் எதிர்பார்த்தது  

ஆறாவது முறையாக கே. எஸ். ஜி. “ ஒன் மோர் “என்றதும் அவர் அருகே வந்த  சிவாஜி, “நீங்க சொன்ன காட்சியில் எனக்குத் தெரிஞ்ச மாதிரி எல்லாம் நான் நடித்துவிட்டேன். அதையெல்லாம் மீறி நீங்க என்ன எதிர்பார்க்கறீங்கன்னு எனக்குப் புரியலே. அதனால நான் எப்படி நடிக்கணும்னு நீங்க கொஞ்சம்  நடிச்சுக் காட்டிடுங்க” என்றார்

அவர் அப்படிச்  சொன்னவுடன் "என்ன அண்ணே விளையாடறீங்களா? உங்களுக்கு நான் நடிச்சிக்காட்டறதா?" என்றுதான்  கே.எஸ்.கோபால கிருஷ்ணன் சொல்லுவார்  என்று எல்லோரும் எதிர்பார்த்தனர்

ஆனால் அவர்கள் எல்லோரது நினைப்பிற்கும் மாறாக கே.எஸ். ஜி நடித்துக் காட்டினார்.

கே.எஸ்.ஜி நடித்ததை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த சிவாஜி அவர் நடித்து முடித்தவுடன் யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசாமல்  காரில் ஏறி வீட்டுக்குப்  போய்விட்டார்.

சிவாஜியை பொறுத்தவரை அதுவரை எந்த படப்பிடிப்பிலும் அவர் அப்படி நடந்து கொண்டதில்லை என்பதால் படப்பிடிப்பு தளத்தில் இருந்த எல்லோருமே  அதிர்ச்சி அடைந்தனர்

சிவாஜி படப்பிடிப்பிலிருந்து வெளியேறிவிட்டார் என்ற செய்தி தெரிந்ததும் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கே.எஸ்.ஜியின் தம்பி கே.எஸ். சபரிநாதன் அலறியடித்துக்கொண்டு செட்டுக்கு ஒடி வந்தார்  

“என்ன, அண்ணே இப்படி பண்ணிட்டீங்க. சிவாஜியோட  கால்ஷிட் நமக்கு இன்னியோட முடியுது.  நாளை முதல் அவர் வேறு படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். அதுக்கு போனாரென்றால் இன்னும் இரண்டு மாதத் திற்கு அவரைப்  பிடிக்கவே முடியாது..அப்படி இருக்கும்போது ஏதாவது பேசி அவரை சமாதானப்படுத்தி காட்சியை எடுக்கறதை விட்டுட்டு இப்படி செஞ்சிட்டீங்களே! சிவாஜி யாரு? நடிப்புக்கே அவர்தான் அத்தாரிட்டி என்று உலகமே அவரைப் புகழுது. அவருக்கு போய் நீங்க நடிக்க சொல்லிக் கொடுக்கலாமா?

இப்ப அவர் கோவிச்சுக்கிட்டு போய்ட்டார். இந்த ஒரு காட்சிக்காக படமே நிக்கப்போவுது. இனிமே யாரு சிவாஜிகிட்ட பேசி அவரை சமாதானப்படுத்தி ஷூட்டிங்கிற்கு கூப்பிட்டு வர்றது?” என்று கோபாலகிருஷ்ணனிடம்  கொஞ் சம் கோபமாகவே கேள்வி கேட்ட சபரிநாதன் “அவ்வளவுதான் இனி இந்தப் படம் இப்போதைக்கு வெளியாகாது” என்று அலுத்துக்கொண்டபடியே அந்த செட்டை விட்டு  வெளியேறினார்

அன்றைய படப்பிடிப்பை முடித்துக் கொண்டு தனது  அலுவலகத்திற்கு வந்த கே.எஸ். ஜி க்கு ஒரே குழப்பம்!

“காட்சி நன்றாக வரவேண்டுமென்பதற்காகத்தானே நான் நடித்துக் காட்டி னேன். அது தப்பா? சிவாஜிக்கு  நடித்துக் காட்டியிருக்கக் கூடாதோ?” என்றெல்லாம் தன்  மனதுக்குள்ளேயே விவாதம் நடத்தத் தொடங்கினார்  அவர்

சிவாஜி அடுத்த படப்பிடிப்பிற்கு போய்விட்டார் என்றால் இந்தப் படம் முடிய குறைந்தது இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என்று தம்பி சபரி பயமுறுத்தியது அவர் மனதை இன்னும் அதிகமாகக் குடைந்தது 

இந்த சம்பவம் நடந்தபோது மாலை ஐந்து மணி!

சரியாக மாலை 7 மணிக்கு கே.எஸ். ஜி அலுவலகத்திற்கு சிவாஜி வீட்டிலிருந்து ஒரு போன் அழைப்பு வந்தது!

“அண்ணன் நாளை காலை 7 மணிக்கு உங்க ஷீட்டிங்கிற்கு வராராம். அடுத்த சூட்டிங்கிற்கு  பத்து மணிக்கு வரேன்னு சொல்லிட்டாரு! இந்தத் தகவலை டைரக்டருக்கு  சொல்லிடுங்க” என்றார் போனில் பேசியவர்

போனில் வந்த அந்த தகவலுக்குப் பிறகுதான்  கே.எஸ்.ஜிக்கும் அவர் சகோதரருக்கும் உயிரே வந்தது

அடுத்த நாள் காலை ஆறு மணிக்கே  படப்பிடிப்பு தளம்  பரபரப்பானது!
சரியாக 7 மணிக்கு  மேக்கப் போட்டுக் கொண்டு  அந்த காட்சிக்குத் தேவையான உடைகளோடு தயாராக வந்தார் சிவாஜி

கே எஸ் ஜி ஸ்டார்ட் ஆக்ஷன் என்று சொல்ல சிவாஜி நடிக்க ஆரம்பித்தார்!

முதல் நாள் படப்பிடிப்பில் சிவாஜி நடிப்பில் திருப்தி ஏற்படாமல்  “ஒன்  மோர், ஒன்  மோர்” என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்த  இயக்குனர் கோபாலகிருஷ்ணன் அன்று சிவாஜி நடித்ததைப் பார்த்து மெய்மறந்து அவரை அப்படியே  கட்டி அணைத்துக் கொண்டார்!



"இதைத்தானே உங்ககிட்ட நான்  எதிர்பார்த்தேன். இதை நேத்து கொடுக்கமாட்டேன்னுட்டீங்களே" என்று கே. எஸ்.ஜி. கேட்டபோது “இயக்குனரே!  நேத்து நீங்க நடிச்சிக் காட்டினதுக்கு அப்புறம் யார் கிட்டேயும் ஒரு வார்த்தை கூட பேசாம நான் போனவுடனே நீங்க  எல்லோரும் நான்  கோவிச்சுக்கிட்டு போயிட்டேன்னு நினைச்சிருப்பீங்க.

நான்  கோவிச்சிக்கிட்டு போகலே. ஆனா குழப்பத்தோட போனேன். அப்படி குழப்பத்தோட நான் போனதற்குக் காரணம் என்ன தெரியமா?

நீங்க நடிச்சிக் காட்டினதுதான்.

நீங்க நடிச்சிக் காட்டினதைப் பார்த்ததுக்கு அப்புறம் இத்தனை படங்களில் நடிச்சும் இந்த இயக்குனர் நடித்த மாதிரி நம்மளால ஏன் நடிக்க முடியலை ன்னு நான் குழம்பிட்டேன். ராத்திரி முழுக்க வீட்டு கண்ணாடி முன்னால நின்று நீங்க நடிச்ச மாதிரி பல தடவை  நடிச்சுப் பாத்துக்கிட்டிருந்தேன். என் பெண்டாட்டி கமலா கூட “ஏங்க இது என்ன உங்களுக்கு  முதல் படமா என்ன ? ஏன் இப்படி திரும்பத் திரும்ப நடிச்சி பார்த்துக்கறீங்க?”  என்று கேட்டா..  ஆனால் எனக்கே என் நடிப்பில் திருப்தி ஏற்பட்டதும்தான் நான் படுக்கவே போனேன்” என்று சிவாஜி சொன்னபோது  இயக்குனர் கே.எஸ். ஜியின் கண்கள் குளமாயின

இப்படியும் ஒரு நடிகனா என்று ஆச்சர்யப்பட்டுப் போனார் அவர்

அந்தப் படப்பிடிப்பிலே இருந்த அனைவரும்  இந்த நிகழ்ச்சியைப் பார்த்து அப்படியே பிரம்மித்துப் போய் நின்றனர்.

என் இரண்டாவது தயாரிப்பானவாழ்க்கைதிரைப்படத்தின் நாயகன் நடிகர்திலகம்தான்.



 ஏறக்குறைய கே எஸ் கோபாலகிருஷ்ணனின் பேசும் தெய்வம் படத்தின் படப்பிடிப்பில் நடைபெற்றது போன்ற ஒரு  சம்பவம்  வாழ்க்கைபடத்தின்போதும் நடந்தது

வாழ்க்கை” படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் சிவாஜி அவர்களின் மற்றொரு படத் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக நான் ஏவி.எம். ஸ்டூடியோ சென்றிருந்தேன். ஒப்பனை அறையில் படப்பிடிப்பிற்கு தயாராகிக்கொண்டிருந்த சிவாஜி அவர்களைச் சந்தித்தபோது. வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு,”படம் முழுவதும் பார்த்துவிட்டாயா? எப்படி வந்து இருக்கிறதுஎன்று கேட்டார் சிவாஜி. “மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. படம் பார்க்கும் போது பல காட்சிகளில் நான், டைரக்டர் சி.வி.ராஜேந்திரன் என்று பலரும் கண்கலங்கி விட்டோம்என்றேன் நான்.

நான் கிளம்புகின்ற நேரத்தில்  படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் என் நடிப்பு கொஞ்சம் குறைஞ்சிருக்குன்னா கூட தயங்காம சொல்லுப்பா. நான் திரும்பவும் நடிச்சித் தரத் தயாரா இருக்கேன்என்றார் சிவாஜி.

அப்போது அவ்வளவாக விவரம் இல்லாத ஒருவனாக  நான் இருந்தேன்  என்றுதான் சொல்லவேண்டும். இல்லையென்றால்சார் நானே உங்ககிட்ட சொல்லணும் என்று இருந்தேன். நல்ல காலம் நீங்களே கேட்டு விட்டீர்கள். எல்லா காட்சிகளும் ரொம்பப் பிரமாதமாக அமைந்திருக்கிறது. ஆனால் ஒரே ஒரு காட்சியில் மட்டும் உங்க நடிப்பு இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்று தோன்றியது. அந்தக் காட்சியை மட்டும் திரும்பவும் படமாக்கினால் நன்றாக இருக்கும் என்று எனக்குள் ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது.  அந்த காட்சியை மட்டும் நீங்கள் மீண்டும் நடித்துத் தந்தால் நன்றாக இருக்கும்என்று சொல்வேனா?

வாழ்க்கைசிவாஜிக்கு 242வது படம். எனக்கு இரண்டாவது படம்.

242 திரைப்படங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குணச்சித்திரங் களைப் பிரதிபலித்து, நடிப்பிற்கு இலக்கணமாகவும்,பல்கலைக்கழகமாகவும் விளங்கும்  கலைச்சக்ரவர்த்தியான அவரிடம் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் ஏற்கனவே அவர் நடித்த காட்சியை மீண்டும் நடித்துத் தரச் சொல்கிறேன்.

எப்படிப்பட்ட அறியாமை பாருங்கள்!

எந்தக் காட்சி உனக்குத் திருப்தியாக இல்லை?” என்று கேட்டு விட்டுஓ அந்தக் காட்சியா? அந்தக் காட்சியில் அதற்கு மேல் நடித்தாலோ, அல்லது வேறு மாதிரி நடித்தாலோ சரியாக வராது நன்றாகவும் அமையாது.” என்றெல்லாம் சொல்லி சிவாஜி என்னை சமாதானப்படுத்தவில்லை.

நான் சொல்லி முடித்தவுடன் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல்சரிப்பா நீ படப்பிடிப்பிற்கு ஏற்பாடு செய். நான் வந்து மீண்டும் நடித்துத் தருகிறேன் என்றார்..

அடுத்த வாரமே பிரசாத் ஸ்டுடியோவில் செட் போடப்பட்டு அந்தக்காட்சி மீண்டும் படமாக்கப் பட்டது.

இந்த சம்பவம் நடந்தபோது சிவாஜி அவர்கள் திரையுலகில் இருந்த உயரத்தையும், அவரது திரையுலக அனுபவத்தையும் மனதில் இருத்திக் கொண்டு இன்றைய சினிமாவின் நிலையோடு இந்த சம்பவத்தை ஒப்பிட்டுப் பார்த்தால்தான் இந்த சம்பவத்தின் அருமை புரியும்.

சிவாஜி போன்ற இமாலயத் திறமை கொண்ட நடிகரை இனி எக்காலத்திலும் இந்தத் திரையுலகம் சந்திக்கப் போவதில்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதைப்போல நூறு மடங்கு உண்மை சிவாஜி போன்று பழகுவதற்கு எளிமையான, இனியவரான  மனிதனை இந்தத் திரையுலகம் இனி எந்தக்காலத்திலும் சந்திக்கப் போவதில்லை என்பதும் .

இன்னும் ஒரு ஐம்பது வருடத்திற்குப் பிறகு இன்றுள்ள நடசத்திரங்கள் பற்றி இப்படி ஒரு சம்பவத்தை  எந்த ஒருவராவது  பகிர்ந்து கொள்ள முடியமா? அப்படி ஒரு மனப்பக்குவத்தில் இன்றுள்ள நடிகர்களும் இயக்குனர்களும் இருக்கிறார்களா? - என்ற கேள்வி பதில் இல்லாத கேள்வி என்பதை அனைவரும் ஒப்புக் கொள்விர்கள் என்று எண்ணுகிறேன்.

 

 

 

 

 

 

 

Comments

  1. Sivajiku Nigar Sivaji mattme... Rajalakshmi from Royapuram.🙏🙏🙏👌👌👌💐💐💐

    ReplyDelete
  2. அருமையான பதிவு👌👌💐💐💐

    ReplyDelete
  3. I m a huge fan of MGR but I always like to watch Sivaji sir old black n white movies Specially Director Bhimsing movies

    ReplyDelete
  4. சிவாஜி நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவர். அவர் திரைத்துறைக்கு வருவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் சக்தி நாடக சபாவில் நடித்துக்கொண்டிருந்தபோது எங்கள் திருப்பத்தூரில் ஆறு மாதங்கள் சிவாஜி தங்கி அந்த சபாவின் நாடகங்களில் நடித்தார். அதனால் சிவாஜிக்கு பல நண்பர்கள் இந்த ஊரில் இருந்தார்கள். அவர் நடித்த நாடகங்கள் கவியின் கனவு,நூர்ஜகான்,என் தங்கை...போன்றவைகள்.இத்தகவல்கள் என் தந்தை எனக்குக் கூறியது.அப்போதே கனல் தெறிக்க வசனங்கள் பேசுவாராம் சிவாஜி அவர்கள். திரு.சித்ரா லட்சுமணன் அவர்கள் முதலில் தன்னுடைய Youtube சேனலில் சிவாஜி கணேசன் அவர்களின் கட்டுரையுடன் ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சித்ரா அவர்கள் எங்கள் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதில் எனக்கு தனி மகிழ்ச்சி.
    ஆ.ராஜமனோகரன்
    9361061363

    ReplyDelete
  5. Sivajiganeshan excellent artists

    ReplyDelete
  6. Nadigar thilakam always Great

    ReplyDelete
  7. கட்டுரையை படிக்கும் போதே சித்ரா சாரின் குரலில் சொல்வது போலவே உள்ளது. அருமை..

    ReplyDelete
  8. அருமையான பதிவுகள் எங்களுக்கு தெறியாத சம்பவங்கள் நண்றி

    ReplyDelete
  9. சார் இது வெறும் கட்டுரை மாதிரியே இல்லை..கண் முன்னே நடக்குற மாதிரியே தோணுது சார்..வார்த்தைகளும் நடையும் அற்புதம் சார்..நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களால வாசிக்குற பழக்கம் வந்துள்ளது..நன்றி சார்..ஜெய்சங்கர் போன்ற அற்புதமான நடிகர், சிறந்த நல் உள்ளம் கொண்ட மனிதரின் தகவல்களையும் பதிவிடுங்க சார்..

    ReplyDelete
  10. நடிகர்திலகத்தைப் போல் தொழில் பக்தி கொண்டவர்களை காண்பதரிது.

    ReplyDelete
  11. அருமையான கட்டுரை...

    ReplyDelete
  12. The great actor and the great periods.but nowadays money mind actors .nobody obey the producer.

    ReplyDelete
  13. அது சரி
    பேசும் தெய்வம் படத்தில்
    எந்த காட்சி அது என்று சொன்னால் நன்றாக இருக்குமே

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog