இளையராஜாவை பஞ்சு அருணாசலத்துக்கு அறிமுகப்படுத்திய கதாசிரியர் 

இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய  பஞ்சு அருணாசலத் துக்கு இளையராஜாவை அறிமுகப்படுத்தியவர் கதாசிரியரான ஆர். செல்வராஜ் என்பது எல்லோரும் அறிந்த ஒரு செய்தி.

ஆனால் இளையராஜா செல்வராஜிற்கு எங்கே எப்படி அறிமுகமானார் என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை

1970 களில் கம்யுனிஸ்ட் கட்சியின் எல்லா பொதுக் கூட்டங்களிலும் பாவலர் வரதராஜனின் இசைக் கச்சேரி தவறாமல் இடம் பெறும். அந்த இசைக்குழுவில் பாவலரின் சகோதரர்களான பாஸ்கர், ராஜா, அமர்சிங் ஆகிய மூவரும் இடம் பெற்றிருந்தனர். கம்யுனிஸ்ட் கட்சித்  தலைவர்களில் ஒருவரான சங்கரய்யாவின் சகோதரர் மகன்தான் கதாசிரியர் ஆர்.செல்வராஜ்.

மதுரையிலே அப்படிப்பட்ட கச்சேரிகள் நடக்கும்போதெல்லாம் பாவலர் வரதராஜன் மங்கம்மா சத்திரத்தில்தான் தங்குவார். அப்போது மதுரையில் தங்கியிருந்த ஆர்.செல்வராஜ் முதல் முதலாக மங்கம்மா சத்திரத்தில்தான் ராஜாவை சந்தித்தார்.

இளையராஜா இசையமைப்பாளர் ஆவதற்கு செல்வராஜ்தான் ஒரு கருவியாக இருக்கப்போகிறார்  என்பதால் காலம் ஏற்படுத்திய ஒரு  சந்திப்பு என்றுதான் அந்த சந்திப்பை கொள்ளவேண்டும். இல்லையென்றால் முதல் சந்திப்பிலேயே அவர்கள் அந்த அளவிற்கு நெருக்கமாகி இருக்க வாய்ப்பில்லை.

தன் நண்பனான செல்வராஜிற்கு தனது சகோதரர்களான பாஸ்கர், அமர்சிங் ஆகியோரை அறிமுகப்படுத்தி வைத்தார் ராஜா. அதைத்  தொடர்ந்து அந்தச் சகோதர்கள் எப்போது மதுரை வந்தாலும் தவறாமல்  செல்வராஜை சந்திப்பதை வழக்கமாக்கிக் கொண்டனர்

இதற்குப் பிறகு ஒரு கால கட்டத்தில் சென்னை நோக்கி நகர்ந்த  ஆர்.செல்வராஜ் பலத்த போராட்டங்களுக்குப் பிறகு கதாசிரியர் பாலமுருகனிடம் உதவியாளராக சேர்ந்து பின்னர் கதாசிரியர் பஞ்சு அருணாச்சலத்தோடு இணைந்து பணியாற்றத் தொடங்கினார்

    

ஆர். செல்வராஜைத் தொடர்ந்து 1969 ஆம் ஆண்டு தன்னுடைய  26ஆம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு ராஜா   வந்த போது அவரது  இன்னொரு நெருங்கிய நண்பரான பாரதிராஜா  சினிமாவில் சேர தீவிர முயற்சி செய்து கொண்டிருந்தார்



இசையமைப்பாளராக வேண்டுமென்றால் கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றி ருந்தால் மட்டும் போதாது என்று ராஜாவுக்கே தோன்றியதோ இல்லை யாராவது அறிவுறுத்தினார்களோ அப்போது மைலாப்பூரில் இருந்த தன்ராஜ் மாஸ்டரிடம் மேற்கத்திய இசையைக் கற்றுக் கொள்ளத் தொடங்கிய அவர் கூடவே பியானோ, கிதார் போன்ற இசைக்கருவிகளையும் வாசிக்கக் கற்றுக்கொண்டார். பின்னர் லண் டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் கிளாசிகல் கிடார்   தேர்வில் தங்கப் பதக்கம் வென்றார்.

சென்னையிலே பாரதிராஜாவின்  நாடகம் தவிர மற்ற நாடகக் குழுக்களிலும் கிடார் வாசித்துக் கொண்டிருந்த ராஜாவிற்கு ஒரு கால கட்டத்தில் இசையமைப் பாளர் தட்சிணாமூர்த்தி ஜி. கே. வெங்கடேஷ் ஆகியோரோடு இணைந்து பணியாற்றக்கூடிய வாய்ப்பு கிடைத்தது

இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்ற  கனவை சுமந்து கொண்டிருக்கும்  தனது தம்பியை எப்படியாவது இசையமைப்பாளராக ஆக்கிவிட வேண்டும் என்று தீவிர மாக முயன்று கொண்டிருந்த பாஸ்கர் தினமும் காலைமுதல் மாலை வரை கம் பெனி கம்பெனியாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்.அப்போது  இளையராஜா விற்கு வாய்ப்பு தேடுகின்ற பணியில் பாஸ்கரோடு இணைந்து முழு மூச்சோடு செயல்பட்ட இன்னொருவர் ஆர்.செல்வராஜ்.

பஞ்சு அருணாச்சலம் ஒரு நாள் ஆர் செல்வராஜிடம் பேசிக் கொண்டிருந்தபோது தமிழ் சினிமாவின் இசையை மாற்றி அமைக்கக் கூடிய ஒரு திறமையான இசையமைப்பாளரை  அறிமுகப் படுத்த வேண்டும் என்ற தனது ஆசையை அவரிடம்  வெளிப்படுத்தினார்

அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்திற்காகக் காத்துக் கொண்டிருந்த செல்வராஜ் “எனக் குத் தெரிஞ்ச ஒரு பையன் இருக்கான் . ராஜான்னு பேரு. சின்ன வயசுல இருந்தே ஹார்மோனியம் வாசிச்சுப் பழக்கப்பட்டவன். அவங்க அண்ணன்  பாவலர் வரதராஜனோடு சேர்ந்து நிறைய ஊர்கள்ல கச்சேரிகள் பண்ணியிருப்பது மட்டு மில்லாமல் இப்போ இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ்கிட்ட அசிஸ்   டென்ட்டா இருக்கான். அவனுடைய  பல டியூன்களை நான் கேட்டிருக்கேன். அற்புதமாக டியூன் போடுவான்.இசையமைப்பாளர் ஆகணும்கிறதுதான்  அவ னோட லட்சியம்.உங்களுக்கு ஓ.கே.ன்னா சொல்லுங்க.நாளைக்கே நான் அவ னைக்  கூட்டிக்கிட்டு  வர்றேன் என்றார்.

நாடகங்களுக்கு மியூஸிக் போட்டது மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் ஜி.கே. வெங்கடேஷ்கிட்ட உதவியாளராகவும் இருக்கான்னா நிச்சயமா ரசிகர்களின் பல்ஸ் தெரிஞ்சவனாகத்தான் இருப்பான் என்று  மனதுக்குள்ளேயே ஒரு  கணக்குப் போட்ட பஞ்சு அருணாசலம்   சரி நாளைக்கு அவனைக்  கூட்டிகிட்டு வாஎன்றார்

அன்று இரவு முழுவதும்  செல்வராஜ் சொன்ன அந்த இசையமைப் பாளரைப் பற்றிய நினைவு  பஞ்சு அருணாசலத்தை சுற்றிச் சுற்றி வந்தது.

கன்னடத்திலிருந்து தமிழிற்கு பஞ்சு அருணாசலம் அழைத்து வந்த இசையமைப் பாளர்தான் விஜய பாஸ்கர்.தமிழிலே பல திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பினைப் பெற்ற அவர் நல்ல  இசையமைப்பாளர்  என்ற பெயரினைப் பெற்றிருந்ததால் அடுத்து தான் அறிமுகப்படுத்தப்போகும் இசையமைப்பாளரும் மிகப் பெரிய அளவிலே ஜெயிப்பார் என்ற நம்பிக்கையுடன் அன்று இரவு தூங்கி னார் பஞ்சு.
மறுநாள் மாலையில் பஞ்சு அருணாசலம் தங்கியிருந்த கிளப் ஹவுசுக்கு ராஜாவை அழைத்து வந்த செல்வராஜ் “அண்ணே... இவர்தான் நான் சொன்ன ராஜா” என்று அறிமுகப்படுத்திவைத்தார்.

ஷர்ட்டை  இன்  பண்ணிக் கொண்டு  ஒல்லியான தேகத்துடன் நின்ற ராஜாவைப் பார்த்ததும் பஞ்சு முதல் நாள் இரவு கண்ட கனவுக் கோட்டை முற்றிலுமாக தகர்ந்தது

தழையத்தழைய  கட்டிய வேட்டியும், நெற்றி நிறைய விபூதி குங்குமமுமாக இசையமைப்பாளர்களைப் பார்த்துப்  பழகிய அவரது கண்களால்  கவர்மென்ட் ஆபீஸ் குமாஸ்தாபோல இருந்த அந்த இளைஞனை, இசையமைப்பாளர் என்று  கொஞ்சமும்  ஏற்றுக்கொள்ள  முடியவில்லை.

ஹார்மோனியம், கிடார் என கையில் ஏதாவது ஒரு இசைக் கருவியை ராஜா எடுத்து வந்திருந்தால்  கூட அவர் மீது பஞ்சு அருணாச்சலத்திற்கு  லேசான நம்பிக்கை  பிறந்திருக்கும். ஆனால் ராஜா அதையும் செய்யவில்லை..

செல்வராஜ் நம்மை இப்படி கவிழ்த்து விட்டாரே என்ற எண்ணம் மனதுக்குள் இருந்தாலும் தன்னுடைய  ஏமாற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ராஜாவை உட்காரச் சொன்னார் அவர்

லேசாக ஒரு சிரிப்புடன் ராஜா அமைதியாக உட்கார செல்வராஜ் அடிக்கடி உன் னைப்பற்றி சொல்லிக்கிட்டே இருப்பாரு. தமிழ்ல ஒரு நல்ல இசையமைப்பாளரைக் கொண்டு வரணும்னு எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை”என்று பஞ்சு அருணாச்சலம் சொன்னபோது “சினிமாவுக்கு இசையமைக்கணும் என்கிற ஆசை யுடன்தான் நான் சென்னைக்கே வந்தேன். பல மாதங்களாக அதுக்காக  முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன்.  பாவலர் கூட பல வருஷம் இருந்ததாலே ஓரளவுக்கு இசையைப் பற்றி தெரியும். நிறையப் பாட்டுக்கு டியூன்  எல்லாம் கூட போட்டு வெச்சிருக்கேன்.’ என்றார் ராஜா.

“அப்படீன்னா சரி... அந்த ட்யூனை எல்லாம் நான் கேட்டுடறேன் அப்புறம் என்ன செய்யலாம்னு ஒரு முடிவு எடுப்போம்.ஒரு இரண்டு நாள் கழித்து வாங்க. வரும் போது மற்ற வாத்தியக் கருவிகளை வாசிக்கறவங்களையும் கூட்டிக்கிட்டு வந்தி டுங்க” என்று ராஜாவிடம் பஞ்சு அருணாசலம் சொன்னபோது “இவனே   ரொம்ப நல்லா பாடுவான். பாடிக்காட்ட சொல்லவா?’என்று கேட்டார் ஆர்.செல்வராஜ்.

சரி என்பதற்கு அடையாளமாக பஞ்சு அருணாசலம் தலையை ஆட்ட தன் அருகி லிருந்த  மேஜை மீது  தாளம் போட்டபடி பாட ஆரம்பித்தார் ராஜா

தமிழ்த் திரையுலகில் தன்னுடைய  அரங்கேற்றம்  நடைபெறுவதற்கான ஆரம்ப நிகழ்ச்சிதான்  அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று  தமிழ் சினிமா உலகைத்  தன்னுடைய  இசைத் திறனால்  இன்றுவரை ஆட்டுவித்துக் கொண்டி ருக்கின்ற அந்த இசை வேந்தனுக்கு அன்று  தெரியாது

அன்னக்கிளி உன்னைத் தேடுதே...’, ‘மச்சானைப் பாத்தீங்களா..?’, ஆகிய இர ண்டு பாடல்களின் மெட்டுக்களை ராஜா பாடிக் காட்டியவுடனேயே  ராஜா எப்படிப்பட்ட திறமைசாலி என்று பஞ்சு அருணாசலத்திற்கு  புரிந்துவிட்டது.

ராஜா பாடிய பாடல்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த பஞ்சு அருணா சலம் ராஜாவிடம் பாடல்கள் நன்றாக இருக்கிறது என்றும் சொல்லவில்லை –நன்றாக இல்லை என்றும் சொல்லவில்லை.

ராஜாவைப் பொறுத்தவரை இது அவருக்கு புது அனுபவமில்லை. பல பட நிறு வனங்களில் இதை விட மோசமான அனுபவங்களை அவர் சந்தித்திருக்கிறார் என்பதால் தனது ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு கிளம்பத் தயாரானார் அவர்

அதற்குப் பிறகு அன்னக்கிளி திரைப்படத்தில் அவருக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது?

தொடரும்

 




 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

சிவாஜின் நடிப்பை குறை சொன்ன இயக்குனர்