எம்.ஜி.ஆருக்கு சிவாஜி எழுதிய கடிதம்
நடிப்பு என்றால் என்ன என்பதற்குப் பொருளாக விளங்கிய நடிகர் திலகம் என்னும் அந்த மகா
கலைஞனோடு பத்திரிகையாளன், பத்திரிகைத் தொடர்பாளன்,உதவி இயக்குநர், தயாரிப்பாளர் என்று பல தகுதிகளில் இணைந்து பணியாற்றக்கூடிய
அரிய வாய்ப்பு பெற்றவன் நான். 1970 தொடங்கி 15 ஆண்டுகள் நான் நடத்திய “திரைக்கதிர்” பத்திரிகை அதன் ஆரம்பக்கட்டங்களில் சிவாஜி ரசிகர்களுக்காக
தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட பத்திரிகையாகவே வெளிவந்தது. இதழ்கள் தோறும்
ரசிகர்களின் கேள்விகளுக்கான சிவாஜியின் பதில்கள், சிவாஜியின் டைரி என்ற பெயரில் மாதம் முழுவதும் சிவாஜி கலந்து
கொள்ளும் படப்பிடிப்புகள் மற்றும் அவரது நிகழ்ச்சிகளின் தொகுப்புகள், சிவாஜி படச் செய்திகள்
என்று முழுக்க முழுக்க சிவாஜி பற்றிய செய்திகளே அந்த இதழில் நிறைந்திருக்கும். இப்படி பத்திரிகையாளனாக
அவரோடு தொடங்கிய நட்பு அவரைக் கதாநாயகனாக வைத்து படம் எடுக்கின்ற அளவிற்கு வளரும் என்று
நான் கனவில் கூட எண்ணியதில்லை. அதை இறைவன் எனக்களித்த
வரம் என்றுதான் கூறுவேன்.
அப்படத்தின் நூறாவது நாள் விழாவிற்குத் தலைமை தாங்கிய நடிகர்திலகம்தான் என் இரண்டாவது தயாரிப்பான ”வாழ்க்கை ” திரைப்படத்தின் நாயகன்.
ஒரு நாள் காலையில் சிவாஜி அவர்களின் வீட்டிற்குச் சென்ற நான் அவரிடம் “நாளை காலையில் ‘டப்பிங்’கிற்கு ஸ்டுடியோ
புக் பண்ணியிருக்கிறேன். நீங்கள் எத்தனை மணிக்கு வருகிறீர்கள்” என்று அவரைக்
கேட்டேன்.
நான் அப்படிக் கேட்டவுடன் சிவாஜியின் கூரிய கண்கள் என்னை ஒரு முறை ஊடுருவிப் பார்த்தன. “அண்ணனைப் பத்தி நீ என்ன நினைச்சிக்கிட்டு இருக்கே? உன்னை என் தம்பி
மாதிரி நினைச்சி பழகறதினாலே எப்படி வேணும்னாலும்
என்னோட ‘டீல்’ பண்ணலாம்னு நினைச்சிட்டியா? உன் இஷ்டத்துக்கு டப்பிங் தியேட்டரை புக் பண்ணிட்டு என்னை
டப்பிங்கிற்கு வரச் சொல்லி கூப்பிடறே?" என்றார் அவர் .
சிவாஜி அப்படி என்னிடம் கடுமையாக என்றும் பேசியதேயில்லை. ஆகவே ஒரு நிமிடம்
என்ன பதில் பேசுவது என்று எனக்குப் புரியவில்லை.
அவர் அப்படி என்னிடம் கடுமையாக பேசுகின்ற அளவிற்கு என்ன தவறு செய்தேன் என்று யோசித்துப் பார்த்தபோதுதான் நான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன்
என்று எனக்குப் புரிந்தது.
"எப்போது டப்பிங் பேசுகிறீர்கள்?" என்று அவரைக் கேட்டுவிட்டு அவர் என்று பேசுகிறேன்
என்று சொல்கின்றாரோ அந்தத் தேதியில் ‘டப்பிங்’கிற்கு ஏற்பாடு செய்யாமல் நானாக ‘டப்பிங்’கிற்கு ஏற்பாடு செய்துவிட்டு அவரை அழைப்பது எந்த
வகையில் நியாயம்?
என் தவறை உணர்ந்த அடுத்த நிமிடம் அவரிடம்,” மன்னிச்சிக்கங்க சார். ஏதோ அவசரத்தில் தவறு செய்து விட்டேன். நாளைக்கு தியேட்டரை
கேன்சல் செய்து விடுகிறேன். உங்களுக்கு எப்போது முடியுமோ அப்போது சொல்லுங்கள் தியேட்டரை
புக் செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்புவதற்காக
சோபாவை விட்டு எழுந்தேன்.
உடனே தன் கைகளால் என் தோளைத்தொட்டு என்னை அமர்த்திய சிவாஜி “எனக்காக தியேட்டரை எல்லாம் கேன்சல் செய்ய வேண்டாம்.நான் நாளைக்கு காலையில் டப்பிங் பேச வர்றேன். ஆனால் ஒரு கண்டிஷன்” என்றார்.
“எதுவாக இருந்தாலும்
சொல்லுங்கள் சார் செய்யறேன்” என்றேன்.
“நாளை முதல் டப்பிங்
முடியறவரைக்கும் நீ என் கூடத்தான் காலையில டிபன் சாப்பிடணும். சம்மதம்னா சொல்லு
டப்பிங் பேச வர்றேன்” என்றார்.
கரும்பு தின்னக் கூலியா? உடனே சரி என்று
ஒப்புக்கொண்டேன். இரண்டே நாட்களில் முழு படத்திற்கான டப்பிங்கையும் அவர் பேசி முடித்து விட்டார். அந்த இரண்டு நாளும் அவர் கொண்டு வந்த டிபனில் நான் மட்டுமல்ல
அந்த தியேட்டர் ஒலிப்பதிவாளர், டைரக்டர், உதவி டைரக்டர்கள் என்று பத்து பேருக்கு மேல் சாப்பிட்டோம்.
1980 களில் தயாரிப்பாளர்கள் எந்த
அளவிற்கு கவுரவமாக நடத்தப் பட்டார்கள்
என்பதைத் தெரிவிப்பதற்கு ”வாழ்க்கை"
திரைப்படத் தயாரிப்பின் போது நடந்த இன்னொரு சம்பவம் ஒரு நல்ல உதாரணம்.
"வாழ்க்கை" படம் முடிந்து வெளியீட்டிற்கு தயாரானபோது படத்தில் நடித்ததற்காக 50 சதவிகித சம்பளத்தைத்தான்
பெற்றிருந்தார் சிவாஜி. 1984ஆம் ஆண்டு
ஏப்ரல் 14ஆம் தேதியன்று
படத்தை வெளியிடுவது என்று முடிவெடுத்திருந்த நிலையில் மீதி சம்பளப் பணத்தைக் கொடுப்பதற்காக
ஏப்ரல் 12 ஆம் தேதியன்று
சிவாஜியைத் தொடர்பு கொண்டேன். “பணம் எல்லாம்
நான் அப்புறம் வாங்கிக்கறேன். நீ நாளை மறுநாள் காலையில புறப்பட்டு முதல்ல தஞ்சாவூர்ல நாங்க கட்டியிருக்கிற
சாந்தி-கமலா தியேட்டர்
திறப்பு விழாவிற்கு வர்ற வேலையைப் பாரு. உனக்கு ஃபிளைட்ல டிக்கட் எல்லாம் கூட போட்டாச்சி” என்றார் அவர் .
அவரது அழைப்பை ஏற்று நானும் என்னுடைய சகோதரர் சித்ரா
ராமுவும், தஞ்சாவூருக்கு சென்றோம். தியேட்டர் திறப்பு விழா கோலாகலமாக நடந்து முடிந்ததும்
சூரக்கோட்டையில் நண்பகல் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தியேட்டரைத் திறந்து வைத்த எம்.ஜி.ஆர். நண்பகல் விருந்து முடிந்து நீண்ட நேரம் சிவாஜி யோடு உரையாடிவிட்டு
பிறகு சென்னை திரும்பினார். அவ்விழா நடந்த பிறகு ஒரு வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக வீரபாண்டி கோவிலுக்குச் சென்றுவிட்டு ஒருவாரத்துக்குப் பிறகுதான் நாங்கள் சென்னை திரும்பினோம். அதற்குப்பிறகே மீதி சம்பளத்துக்கான காசோலையை பெற்றுக்கொண்டார்
சிவாஜி.
எம்.ஜி.ஆர். அவர்களும் சிவாஜி அவர்களும் எதிரும் புதிருமானவர்கள் என்ற
எண்ணம் இன்றுவரை தமிழக மக்கள் மனதில் நிலவி வருகின்றது. ஆனால் அதை பலமாக
பல தடவை மறுத்திருக்கிறார் சிவாஜி.
“தனிப்பட்ட முறையில்
எங்களுக்கிடையே நல்லுறவு இல்லையென்றால் எதற்காக கடிதம் எழுதி என்னை அமெரிக்கா வரச்
சொல்லுகிறார் எம்.ஜி.ஆர்? எதற்காக நான் ‘சார்ட்டர்ட் ஃப்ளைட்’ வைத்துக் கொண்டு
பால்டிமோர் சென்று அவரைப் பார்க்கிறேன்? எதற்காக அவர் காலமாவதற்கு நான்கு நாட்கள் முன்பு “வீட்டிற்கு வா
முக்கியமான பொறுப்பை உன்னிடம் கொடுக்கணும்” என்று சொல்லப்போகிறார்?.இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். தனிப்பட்ட முறையில் நாங்கள் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம்” என்று தன் வாழ்க்கை
வரலாற்றுப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் சிவாஜி.
எம்.ஜி.ஆர்.-சிவாஜி இருவரது நெருக்கத்தையும்
உணர்கின்ற ஒரு வாய்ப்பு சிவாஜி அவர்கள் டாக்டர்
பட்டம் பெற்றதையொட்டி அவருக்கு திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தியபோது எனக்குக்
கிடைத்தது. அந்த பாராட்டு
விழாக் குழுவில் பாரதிராஜா, ஏவி.எம்.சரவணன், ரஜினிகாந்த், கமல்ஹாசன்,
மேஜர் சுந்தரராஜன் ஆகியோரோடு நானும்
முக்கிய பொறுப்பு ஏற்றிருந்தேன்.
அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். விழாவிற்கு தலைமை தாங்கினால் நன்றாக இருக்கும் என்று விழாக் குழுவினர் அனைவரும் முடிவெடுத்தோம். அதில் சிக்கல்
என்னவென்றால் விழா நடைபெற இருந்ததற்கு முதல் நாள்தான் எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்புவதாக இருந்தார். ஆகவே தனது பாராட்டு
விழாவிற்கு தலைமை தாங்க வேண்டும் என்று கேட்டு
எம்.ஜி.ஆருக்கு சிவாஜியே
தன் கைப்பட ஒரு கடிதம் எழுதி அவரை அழைப்பது என்றும் அந்த கடிதத்தை
இயக்குநர் பாரதிராஜா தில்லிக்கு எடுத்துச் சென்று எம்.ஜி.ஆரிடம் தந்து விழாவிற்கு எம்.ஜி.ஆரை தலைமை தாங்கக் கேட்டுக் கொள்வது என்றும் திட்டமிடப்பட்டது.
அந்த கடிதத்தில் கையெழுத்திட வேண்டிய சிவாஜி அப்போது கோபிசெட்டிப் பாளையத்தில் “மண்ணுக்குள் வைரம்” படப்பிடிப்பில்
இருந்தார். கோபிச்செட்டி
பாளையம் சென்று எம்.ஜி.ஆருக்கு சிவாஜி
எழுதும் கடிதத்தில் கையெழுத்து வாங்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி நான் கோபிசெட்டிபாளையம் சென்று சிவாஜி அவர்களிடம்
கையெழுத்தை வாங்கிக்கொண்டு சென்னை திரும்பினேன். எனக்குத் தெரிந்து எம்.ஜி.ஆருக்கு சிவாஜி எழுதிய ஒரே கடிதம் அதுவாகத்தான் இருக்கும்
என்பதால் புகழ் பெற்ற அக்கடிதத்திற்கு ஒரு பிரதி எடுத்து அப்போதே பத்திரப் படுத்துக் கொண்டேன்.
இத்தனை தீவிர முயற்சிகளுக்குப் பிறகும் அந்த விழாவில் எம்.ஜி.ஆர். அவர்களால் கலந்து
கொள்ள முடியவில்லை. அது நீண்ட நாட்களுக்கு என் மனதிற்குள் ஒரு குறையாகவே இருந்தது. அந்தக் குறையை
நானும் எனது சகோதரர் சித்ரா ராமுவும் இணைந்து தயாரித்த “ஜல்லிக்கட்டு”நூறாவது நாள் விழாவில் தீர்த்துக் கொண்டேன். அதற்கு பெரிதும்
உதவியாக இருந்தவர் ஜல்லிக்கட்டு படத்தின் நாயகனான சத்தியராஜ்.
சிவாஜியும் சத்யராஜும் இணைந்து நடித்த
"ஜல்லிக்கட்டு" திரைப்படத்தின் 100வது நாள் விழாவிற்கு எம்.ஜி.ஆர்.தான் தலைமை.
”பல்லாண்டு காலம்
திரையுலகை ஆண்ட ஈடு இணையற்ற கலைச் சக்ரவர்த்திகளாக எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இருந்த போதிலும் சிவாஜி நடித்த திரைப்படத்தின் 100வது நாள் விழாவில்
எம்.ஜி.ஆர். கலந்து கொள்வது
இதுவே முதல் முறை” என்று அந்த விழாவில் கலந்து கொண்ட அனைவரும் பாராட்டிய போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு
அளவேயில்லை.
"ஜல்லிக்கட்டு" நூறாவது நாள் விழாவின் போது நடந்த இன்னொரு ரசமான நிகழ்ச்சி
என்னால் எப்போதும் மறக்க முடியாத ஒன்று.
"ஜல்லிக்கட்டு" நூறாவது நாள் விழா அழைப்பிதழின் முகப்பில் எம்.ஜி.ஆர். படத்தையும்,நடுப்பக்கத்தில்
சத்தியராஜ் படத்தையும்.கடைசீ பக்கத்தில் சிவாஜி படத்தையும் அச்சிட்டிருந்தோம். அந்த அழைப்பிதழை எப்படி வேண்டுமானாலும் மடிக்கலாம் என்பதால்
சிவாஜி அவர்களிடம் அழைப்பிதழைக் கொடுக்கும்போது சிவாஜி அவர்கள் படம் முதலில் வரும்படி
மடித்து அவரிடம் கொடுத்தேன். அழைப்பிதழைப் படித்துப் பார்த்துவிட்டு அழைப்பிதழை என்னிடம்
திருப்பிக் கொடுத்தபோது அதன் முதல் பக்கத்தில் எம்.ஜி.ஆர்.இருப்பது போல மடித்து என்னிடம் கொடுத்தார் சிவாஜி. என் மனதைக்
காயப் படுத்தாமல் அதே நேரத்தில் இதற்கெல்லாம் நான் அப்பாற்பட்டவன் என்று அவர் சொல்லாமல் சொன்ன விதம் இருக்கிறதே அது இன்றளவும்
என் மனதில் ஆழப் பதிந்துள்ள ஒன்று.
சிவாஜி போன்ற இமாலயத் திறமை கொண்ட நடிகரை இனி எக்காலத்திலும் இந்தத் திரையுலகம்
சந்திக்கப் போவதில்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதைப்போல நூறு மடங்கு உண்மை சிவாஜி
போன்று பழகுவதற்கு எளிமையான, இனியவரான மனிதனை இந்தத்
திரையுலகம் இனி எந்தக்காலத்திலும் சந்திக்கப் போவதில்லை என்பதும்.
Comments
Post a Comment